Published On Sep 4, 2023
3.005 திருப்பூந்தராய்(சீர்காழி) | தக்கன் வேள்வி தகர்த்தவன் பூந்தராய் | திருஞானசம்பந்தர் தேவாரம் | @PanniruThirumurai
#SriBrahmapureeswararTemple | #Sirkazhi | #ThirugnanasambantharPathigam
இது சீகாழிப் பதிகங்களுள் ஒன்று. இத்தலத்திற்குப் பன்னிரண்டுத் திருப்பெயர்கள் உண்டு அவற்றுள் சில பதிகங்களுக்கே வரலாறு காணப்படுகின்றது. பூந்தராய் - பூமியைப் பிளந்து சென்று இரணியாக்கதனைக் கொன்ற வராக மூர்த்தி(திருமால்) வழிபட்டது.
இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ பிரமபுரீஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ பெரிய நாயகி
திருமுறை : மூன்றாம் திருமுறை 005 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்
பதிக குரலிசை : திரு மயிலை சற்குருநாத ஓதுவார்
சீர்காழி என்னும் ஊர், பிரளய காலத்தில் உலகம் நீரில் மிதந்த போது தோணியப்பர் அருளால் நீரில் மூழ்காமல் இருந்தது. தோணி என்றால் படகு. சம்ஸாரம் என்னும் கடலில் தத்தளிப்போற்கு படகு போல் இருந்து கரை சேர்ப்பவர் நம்பெருமான். அதனால் அவர் பெயர் தோணியப்பர் என்றானது. சீர்காழி இறைவனை தொழுதால் பாதுகாப்பாக கரை சேர்வோம் என்று இதிலிருந்து தெரிகிறது.
00:30 தக்கன் வேள்வி தகர்த்தவன் பூந்தராய்
மிக்க செம்மை விமலன் வியன் கழல்
சென்று சிந்தையில் வைக்க மெய்க்கதி
நன்றது ஆகிய நம்பன் தானே. ..... (01)
01:44 புள்ளினம் புகழ் போற்றிய பூந்தராய்
வெள்ளம் தாங்கு விகிர்தன் அடிதொழ
ஞாலத்தில் உயர்வார் உள்கும் நன்நெறி
மூலம் ஆய முதலவன் தானே. ..... (02)
02:42 வேந்தராய் உலகாள விருப்புறின்
பூந்தராய் நகர் மேயவன் பொற்கழல்
நீதியால் நினைந்து ஏத்தி உள்கிட
சாதியா வினையான தானே. ..... (03)
03:46 பூசுரர் தொழுது ஏத்திய பூந்தராய்
ஈசன் சேவடி ஏத்தி இறைஞ்சிட
சிந்தை நோய் அவை தீர நல்கிடும்
இந்து வார்சடை எம் இறையே. ..... (04)
05:20 பொலிந்த என்பணி மேனியன் பூந்தராய்
மலிந்த புந்தியர் ஆகி வணங்கிட
நுந்தம் மேல்வினை ஓட வீடுசெய்
எந்தையாய எம் ஈசன் தானே. ..... (05)
06:13 பூதம் சூழப் பொலிந்தவன் பூந்தராய்
நாதன் சேவடி நாளும் நவின்றிட
நல்கும் நாள்தொறும் இன்பம் நளிர்புனல்
பில்கு வார்சடைப் பிஞ்ஞகனே. ..... (06)
07:19 புற்றின் நாகம் அணிந்தவன் பூந்தராய்
பற்றி வாழும் பரமனைப் பாடிட
பாவம் ஆயின தீரப் பணித்திடும்
சே அது ஏறிய செல்வன் தானே. ..... (07)
08:53 போதகத்து உரி போர்த்தவன் பூந்தராய்
காதலித்தான் கழல் விரல் ஒன்றினால்
அரக்கன் ஆற்றல் அழித்து அவனுக்கு அருள்
பெருக்கி நின்ற எம் பிஞ்ஞகனே. ..... (08)
10:15 மத்தம் ஆன இருவர் மருவு ஒணா
அத்தன் ஆனவன் மேவிய பூந்தராய்
ஆளதாக அடைந்து உய்ம்மின் நும் வினை
மாளுமாறு அருள்செய்யும் தானே. ..... (09)
11:27 பொருத்தமில் சமண் சாக்கியர் பொய் கடிந்து
இருத்தல் செய்த பிரான் இமையோர் தொழப்
பூந்தராய் நகர் கோயில் கொண்டு கை
ஏந்தும் மான்மறி எம் இறையே. ..... (10)
12:30 புந்தியால் மிக நல்லவர் பூந்தராய்
அந்தமில் எம் அடிகளை ஞானசம்
பந்தன் மாலை கொண்டு ஏத்தி வாழும் நும்
பந்தமார் வினை பாறிடுமே. ..... (11)
பதிகப் பலன் : உள்ளத்தால் மிக நல்ல சிவனடியார்கள் வாழ்கின்ற திருப்பூந்தராய் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள, என்றும் அழிதலில்லாத எம் தலைவனான சிவபெருமானைத் திருஞானசம்பந்தன் அருளிச்செய்த இப்பதிகப் பாமாலையைக் கொண்டு போற்றி வாழுங்கள். உங்களைப் பந்தித்து நின்ற வினைகள் யாவும் நீங்கும்.
குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.
"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"